Pages

Tuesday, May 28, 2013

சாமி சத்தியமா

 திருச்சி வெயில் உயிரை உறிஞ்சுகொண்டிருந்த மதிய நேரம்.
ஆஸ்பத்திரி வாசலில் அந்த சவாரியை இரக்கிவிட்ட மனோகர், அந்த சவாரி கொடுத்த காசை வாங்கி சட்டை பாக்கெட்டில் வைக்க போகும் முன் சட்டையில் இருந்த மொத்த பணத்தயும் எடுத்து எண்ணினான்...
மொத்தம் 800 ரூபாய் இருந்தது, அதில் 500 எடுத்து வண்டியில் இருந்த ஒரு பெட்டியில் போட்டான். 150 எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டான். தினமும் இப்படி எடுத்து வைத்துகொள்வது அவன் பழக்கம்.

60 வயது மதிக்கதக்க ஒரு பெரியவர் வந்துகொண்டிருந்தார்.அவர் உடல் மட்டுமல்ல தலை முடியும் கூட முற்றிலுமாய் வெள்ளை உடை அணிந்திருந்தது. அவர் ஆட்டோவிற்க்குத்தான் வருகிறார் என்பதை அவரது தளர்ந்த நடை உணர்தியது.

"தம்பி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட்"
"போலாங்க"
"எவ்ளோப்பா"
"120"
"வேணாம்பா" என்று சாலை நோக்கி நடக்க ஆரம்பித்தார் .
மனோகர் மனதுக்குள் ஒரு குரல், அவர கூப்பிடு கூப்பிடு என கூவியது.

"பெரியவரே கொரச்சுகலாம், வாங்க"
வேணாம் என்று சைகை மூலமே கூறி நடயை தொடர்ந்தார்...
மீண்டும் மனதுக்குள் கூப்பிடு கூப்பிடு என்று குரல் கேட்க, சட்டென்று ஆட்டோவை ஸ்டார்ட் செய்து போய் அவர் அருகே நிறுத்தி,
"எவ்ளோ தற்ரீங்க"
"வேணாம்பா என்ட்ட காசு கம்மியாதான் இருக்கு"
"அதான் எவ்ளோ தருவீங்க"
"50"
"இந்த வெயில்ல எவ்ளோ தூரம் நடப்பீங்க, 75 குடுங்க போலாம்"
"இல்லாபா என்ட்ட அவ்ளோ காசு இல்ல"
"சரி 50 ரூபாவே குடுங்க, வாங்க போலாம்", காலேஜ் ரோடு அருகே இருக்கும் சிறிய ரோட்டின் வழியாக சென்றால் நஷ்டமில்லை என்று கணித்தான்.
"வேணாம்பா, அப்பறம் நீ அங்க வந்து உங்க ஆளுங்கல கூட்டி வெச்சுகிட்டு ஜாஸ்தியா கேட்டா என்னால தர முடியாது"
"நான் அப்படியெல்லாம் இல்லீங்க 50 போதும் வாங்க"
***
காலேஜ் ரோடு, எது நடக்க கூடாது என்று நினைத்தானோ அதே நடந்தது.
ரெயில்வே கேட் மூடியிருந்தது.
"நேரம் ஆகுதுங்கலா, நாம வேணா சுத்தி வந்து பாலத்து வழியா போயிடலாமா"
"வேண்டாம்பா, அவசரம் இல்ல"
எங்கே சுத்தி வந்த பின் ஜாஸ்தி காசு கொடுக்கணுமோ என பயந்து போனார் அந்த பெரியவர்.
வண்டியை ஆஃப் செய்தான்.
"தம்பீ, நீங்க குடிப்பீங்களா", சிறிது நேர சிந்தனையில் இருந்த பெரியவர், அவராகவே ஆரம்பித்தார்.
தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த 150 ரூபாயை தொட்டு பார்த்து, மனதுக்குள் சிரித்து கொண்டே.. " இல்லை" என்று பொய் சொன்னான்.
"நல்லது தம்பி, நானெல்லாம் உங்க வயசுல தெனம் குடிப்பேன். கூலி வேலைதான், மிச்சம் ஆகுற காசு எல்லாத்துக்கும் குடிச்சேன்.அப்பலாம் எம்புத்தியே வேலை செய்யாது, குடிக்க காரணம் கண்டு புடிக்க மட்டும் நல்லா வேலை செஞ்சுது. ஒடம்பு அலுப்பு போக குடிச்சேன்னு நானே சொல்லிக்கிட்டேன்.
இப்ப பாருப்பா எம்பொஞ்சாதிக்கு எதோ வியாதியாம். ரத்தத்த சுத்தப்படுத்தணுமாம், இல்லேன்னா உயிருக்கே ஆபத்தாம். 30 ஆயிரம் கிட்ட ஆகுமாம். அவ்ளோ கொடுக்க நான் இப்ப எங்க போவேன். நான் எவ்ளோ குடிச்சாலும் அடிச்சாலும் கூடயே இருந்தா, என் புள்ள கூட எவ்ளோ கூப்ட்டும் அவன் கூட போகலயே.
நான் குடிச்ச காசெல்லம் இருந்திருந்தா இன்னைக்கு அவள நல்லா பாத்துகிட்டுருப்பேன்.
குடியால செத்தவன் கோடி பேரு, ஆனா குடிய விட்டதால செத்தவன்னு எவனும் இல்ல.
இன்னைக்கு என்னோட குடி பழக்கம் அவள கொன்னுகிட்டு இருக்கு."
மனோகருக்கு இதயமே ஒரு நொடி நின்றது, அவன் மனைவியும் மகளும் கண் முன்னே வந்து சென்றனர்.
***
பஸ் நிலையத்தில் அந்த பெரியவரை இறக்கி விட்ட மனோகர் காசே வாங்காமல் ஸ்டாண்டுக்கு சென்றான்.
அங்கே சதிஷ், "மனோகரு இன்னைகு கச்சேரி கீலப்புதூர் கடயில, 10 மணிக்கு வந்துடு"
"இல்லயா, வீட்டுக்கு போகனும்"
"ஏன்"
"இனிமே குடிக்க வர்ல"
"திடீர்னு?"
"குடியால செத்தவன் கோடி பேரு, ஆனா குடிய விட்டதால செத்தவன்னு எவனும் இல்ல"
இருவரும் அதற்கு மேல் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
மனோகர் நல்லவன்தான், மனைவி பிள்ளை மேல் பாசம் நிறைய கொண்டவன்தான், ஆனாலும் அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் குடியை விட முடியவில்லை.
***
"லட்சுமி.."
"என்ன இன்னைக்கு சீக்கிரமா அதுவும் தெளிவா"
"ஆமா"
அவனிடம் இருந்த 500 ரூபாயை எடுத்து, எப்பொழுதும் டீவு காசு வைக்கும் டப்பாவில் வைத்து விட்டு,
"இன்னொரு டப்பா குடேன்" என்று பாக்கெட்டில் இருந்த 150 ரூபாயை எடுத்தான்.
"இது எதுக்கு"
" நான் குடிக்க வெச்சுருந்த காசு, இனிமே இதையும் சேத்து வெக்க போறேன், இனிமே குடிக்க மாட்டேன்"
பேசுவது புரியாமால் சீக்கிரமாய் வீட்டுக்கு வந்த அப்பாவை சிரித்துகொண்டே பார்த்தாள் மனோகரின் மகள்.
"நெஜமாவா" என்றாள் லட்சுமி.
"சாமி சத்தியமா"
"நான் வேண்டிக்கிட்ட முருகன் என்ன கை விடல" என்றபடியே அவனை இழுத்து கொண்டு சென்று, சாமி படத்துக்கு முன்,
"கும்புட்டுக்கோங்க", என்றாள்.
அவளுக்கு அங்கே தெரிந்த முருகரின் படத்தில் அவனுக்கு தெரிந்தது அந்த பெரியவரின் முகம்தான்.
***

Friday, July 27, 2012

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங் ...

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங் ...
"ஹலோ பூரி இருக்காங்களா "
"இல்லையே "
"இல்லையா ... "
"டீ சாப்ட போயிருக்காங்க "
"ஒ... சரி சரி .. நீங்க..."
"நான் மசால் தோசை "
"எப்ப வருவாங்க"
"இன்னும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கால் பண்ணுங்க"
"சரிங்க"
"நீங்க யாரு பேசறது... "
"நான் கார வடை ..."
"சரிங்க.... வந்தா நான் சொல்றேன்..."

*******

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங் ...
"ஹலோ கார வடையா "
"ஆமாங்க"
"நான்தான் பூரி பேசுறேன்"
"நீங்க ஸ்ட்ரைக் பண்ணனும்...  நாங்க எல்லாம் ஸ்ட்ரைக் பண்ண போறோம்..."
"என்னது  ..."
"ஆமாங்க, உங்களாலதான் எங்களுக்கு பிரச்சனையே "
"எங்களால உங்களுக்கு என்ன பிரச்சனை?"
"உங்கள பொறிச்ச எண்ணைலதான் எங்களையும் பொறிக்கறாங்க.. அது எங்களுக்கு புடிக்கல.. நாங்க ரொம்ப கருப்பாகிடுறோம் ...."
"போங்கடா லூசுங்களா "
..... டொப் .....
"என்னாச்சு பூரி "
"பாருங்க மசால் தோசை அண்ணே ... இந்த கார வடைங்க எங்கள ஸ்ட்ரைக் பண்ண கூப்புடுறாங்க... "
"எதுக்கு ?"
"எதோ, எங்கள பொறிச்ச எண்ணைல அவங்களையும்  பொறிக்கறாங்களாம் , அது புடிக்கலயாம் அதான் ஸ்ட்ரைக் பண்ண போறாங்களாம்"
"அட பாவிங்களா  , அப்படி பாத்தா , வடை சுட்ட  எண்ணைலதான் எங்களையே வேக வெக்கறாங்க.. நாங்க எங்க போறது ..."

*******

"காரவடை தோழர்களே .... பூரி நமது போராட்டத்திற்கு  ஒத்துழைப்பு தரவில்லை.. ஆனாலும் நாம் நமது போராட்டத்தை  துவக்குவோம் ...
இனி பூரி பொறித்த  எண்ணையில்  நம்மை பொறித்தால் நாம் வேகக்கூடாது ... எவ்வளவு  சூடக்கினாலும் நாம் தளரக்கூடாது ...."

*******

"ஐயா ... பருப்பு சரி இல்லைன்னு நெனைக்கறேன் வடை வேகவே மாட்டேங்குது..."
"அதெப்புடி... அதே பருப்புதாண்டா ..."
"எண்ணைல ஏதாவது பிரச்சனையா இருக்கும் ... விடு வேற எண்ணைல  போட்டுக்கலாம்... இப்போதைக்கு அரை வேக்காட்டுலையே எடுத்துடு ... கஸ்டமர் எல்லாம் வர்ற நேரம் ஆகிடுச்சு ..."

*******

"காரவடை தோழர்களே.... நமது போராட்டம் வெற்றி பெரும் தருணத்தை எட்டி விட்டது ...."
*******

"டேய் நேத்து வடை வேகலைன்னு சொன்னியே.... இந்தா... இது பக்கத்து கடைல மீன் பொறிச்ச எண்ணை ... இதுல நல்ல வேகுமாம் ... சீப்பா வாங்கியாந்துட்டேன்..."

*******

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங்...
"ஹலோ மீன்  இருக்கான்களா ...."

  -- முற்றும் --


 நீதி : எண்ணெய் உணவுகளை தரமான கடைகளில் வாங்கிடுங்கள்.

Thursday, July 12, 2012

அலோ

"ஹலோ "
"..."
"எங்க இருக்கீங்க "
"..."
"புரியல ஒரே சத்தமா இருக்கு "
"..."
"என்னது வேலூர் கிட்டயா  சரி சரி "
"..."
"பசங்க இன்னும் வரல வர்ற நேரம்தான் "
"..."
"ஆமா வந்தான் , நான் பணத்த குடுத்துட்டேன் "
"..."
"ஆமா ஆமா நீங்க தந்துட்டு போன ஆயிரம் ரூபா தான் ... குடுத்துட்டேன்.
இருங்க ஊர்ல இருந்து சித்தப்பா வந்துருக்காங்க பேசனுமாம்  "
"..."
"மத்தியானமே வந்துட்டாங்க, இருங்க தரேன் "

"இந்தாங்க மாமா பேசுங்க"

"ஹலோ ராசு , நல்லருக்கியாப்பா "
"..."
"மத்யானமே வந்துட்டேன்பா.. நானும் சித்தியும்தான் வந்தோம்"
"..."
"ஆ.. சுபத்ரா மாப்ள எல்லாரும் நல்ல இருக்காங்க"
"..."
"ஆடி மாசம் நம்ம கோவில்ல திருவிழா வருதுல்ல , அப்போ சித்து-க்கு மொட்ட அடிச்சு காது குத்திடலாம்னு இருக்கோம், அதான் உங்கள எல்லாம் கூப்புட்டு போலாம்னு வந்தேன் "
"..."
"ஆடி மாசாம் நாலான் தேதி ராசு "
"..."
"மொத நாளே வந்துடனும்"
"... "
"நீ வர ராத்திரி  ஆகும்னு பூர்ணிமா சொல்லிச்சு , அதான் பேசிட்டு கெளம்பலாம்னு கூப்ட சொன்னேன்"
"...."
"ஆமா ராசு , இப்போ நேரா பவித்ரா வீட்டுக்குத்தான் போகணும் ,அவளையும் கூப்டுட்டு ... அலோ ...அலோ ...ராசு... அலோ ..."

"என்னம்மா பூரணி பேச பேச கட் ஆயிடுச்சு  "

*****

அடுத்த நாள் ...

தினத்தந்தி ...
"அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது. 23 பேர் பலி "

சன்  நியூஸ் ....
" செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்திருக்கலாம் என்று கூறப்படுகிறது...."

புதிய தலைமுறை ...
"வாகனத்தை ஓட்டும் பொழுது செல்போன் பேச்சை தவிர்ப்பது ஓட்டுபவர் மட்டுமல்ல , எதிர்  முனையில் பேசுபவரின் பொறுப்பும் கூட"

இவைகளை படிக்கவோ  பார்க்கவோ  முடியாமல் , ராசு குடும்பத்தார் வேலூர் அரசு மருத்துவமனை முன் கூட்டத்தில் கதறிக்கொண்டிருந்தார்.

Friday, June 29, 2012

இலையுதிர் காலம்

இரண்டு நாட்களுக்கு முன்... ஒரு இலையுதிர் காலம் ....

"எனக்கு மனசு விட்டு அழனும் போல இருக்கு ...ஆனா  அவங்க முன்னாடி நானே உடைஞ்சுட்டா அவங்க எங்க போவாங்க ... பாவம் யாமினி ... "

கார்த்திக் - மீடியா துறையில் நன்கு அறியபட்ட திறமையான புடைப்பட கலைஞன்.ஒரு பிரபல கல்லூரியில் ஆசிரியர், ஒரு முன்னணி பத்திரிக்கையின் துணை ஆசிரியர்.

ஜனனி - கார்த்திக் யாமினியோட ஒரே மகள், 7-ஆம் வகுப்பு. கார்த்திக் போலவே போட்டோகிராப்பியில் ரொம்ப ஆர்வம் அவளுக்கு.

ஜனனியின் கனவிலேதான் வாழ்ந்தார்கள் கார்த்திக்கும் யாமினியும் ...

"ஒரு போட்டோ ஜர்னலிஸ்ட்டா, என்ன விட பெரிய ஆளா வரணும் அப்படிங்கறதுதான் அவளோட கனவு... இப்போவே என்னோட போட்டோஸ்ல கரெக்ஸன்ஸ்லாம் சொல்வா ... ரொம்ப சுட்டி ... அவள ஒரு மினி ஜீனியஸ்-னு அவங்க மிஸ் கூட போன வாரம்தான் சொன்னாங்க ... "

அவன் மெல்ல அந்த உதிர்ந்த இலைகளின் இடையே ஊர்ந்து நடத்து கொண்டிருந்தான் .மேலே உள்ள மரங்களை பார்த்தான் ...
"கொட்டுற இந்த இலை இன்னும் ஆறு மாசத்துல தழஞ்சுடும் ஆனா ஜனனியோட..."


அவன் எண்ணங்களுக்கு அணை போட்டது அந்த அலைபேசி அழைப்பு ...

"சொல்லுங்க டாக்டர்"

"இதோ பக்கத்துல தான் இருக்கேன் , உடனே வரேன் டாக்டர் "

 *****
சில நாட்களுக்கு முன் ... திருச்செந்தூரில் ...

"அப்பா அப்பா அந்த கண்ணாடி வேணும்பா "
"டேய் அது பொம்ம கண்ணாடிடா "
"பரவால்லப்பா வாங்கி குடுப்பா "
"டேய் வேலா, உனக்கு நான்வேற நல்ல கண்ணாடியா வாங்கி தரேண்டா"
"போறப்போ கேட்டா, சாமி கும்புட்டு வர்றப்போ வாங்கி தரேன்னு சொன்ன இப்ப அப்பறம் வாங்கி தரேன்னு  சொல்ற ..."

"அம்மா அம்மா", என காயத்ரியிடம் ஓடினான்...
தமிழரசனின் நிதி நிலைமை அறிந்த காயத்ரி, "வேணாம் கண்ணா... அந்த கண்ணாடி எல்லாம் போட்டா கண்ணு கேட்டு போய்டும்டா"

வேலன் - தமிழரசன் காயத்ரியின் மூத்த மகன். இந்த திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேண்டிய பின் பிறந்ததால் அவனுக்கு வேலன் என பெயர் வைத்து, வருடா வருடம் பள்ளி விடுமுறையில் வருவதை வழக்கமாய் கொண்டவர்கள்.

இவர்கள் வசிப்பது திருநெல்வேலி அருகே , தாழையூத்து. இருவருக்கும் அங்கே உள்ள சிமென்ட் தொழிற்சாலையில் வேலை, வீடும் அருகேதான் . சொந்த ஊர் ஈரோடு அருகில் ... பிழைப்புக்காக இங்கே வந்தவர்கள்.

"சீக்கிரமா நடடா, ராத்திரிக்குள்ள வீடு போய் சேரணும்... பஸ்சு நிக்குது பாரு ...", வேலனை இழுத்து கொண்டு வேகமாய் நடந்தால் காயத்ரி.

*****
இன்று ...

"ரொம்ப நன்றி டாக்டர், இவ்ளோ சீக்கிரம் எல்லாம் நல்லபடியா முடியும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல ", நிம்மதியாய் டாக்டர் அறையிலிருந்து வெளியே  வந்தார்கள் கார்த்திக் யாமினி...
வெளியே கார்த்திக்கின் பாஸ் நின்றுகொண்டிருந்தார் .. மலேசியா சென்றிருந்த அவர் இப்பொழுதுதான் வருகிறார்.
"ஆப்பரேசன் முடிஞ்சுதா கார்த்திக்"
"நல்லபடியா சார் "
"எப்படி கார்த்திக் ஆச்சு "
"ஸ்கூல்ல எதோ டிராமா ப்ராக்டிஸ்... இவளுக்கு பாரினர் வேடம்னு சொல்லி கூலிங்கிளாஸ் குடுத்துருக்காங்க ... போட்டுகிட்டே ஓடிருக்கா... அப்போ கீழே விழுந்தது கண்ணாடி ஒடிஞ்சு பீசஸ்லாம் கண்ண ஸ்பாயில் பண்ணிடுச்சு.. "
"சின்ன பொண்ணு பாவம்"
"கடவுள் புண்ணியத்துல இந்த Eye Transplantation நல்லபடியா முடிஞ்சுடுச்சு"
"கொஞ்ச நேரம் கரண்ட் இல்லைனாவே நம்மாளா முடியல, பாவம் அஞ்சு நாள் ரொம்ப கஷ்ட்டபட்டுருப்பா..."
"ஆமா சார், எங்களுக்கும் இந்த அஞ்சு நாள் இருட்டாதான் இருந்துச்சு"

*****
சில நாட்களுக்கு பின்...

"சொல்லுங்க கார்த்திக்"
"சார், ஜனனிக்கு ஐ டொனேட் பன்னவங்க அட்ரஸ் கெடச்சுடுச்சு. பொதுவா, யாரு தந்தாங்க யாருக்கு போனதுன்னு சொல்லமாட்டாங்க. டாக்டர் என் கிளோஸ் பிரண்டுஅதனால் நான் ரொம்ப கேட்டதால கண்டுபிடிச்சு குடுத்தார். நானும் யாமினியும் நேர்ல போய் அவங்கள பாத்துட்டு வரலாம்னு இருக்கோம், அதான் ரெண்டு நாள் லீவ் கேக்காலம்னு.."
"கண்டிப்பா "
"நாளைக்கு காலைல கெளம்பறோம் சார்"
"ஆமா எங்கன்னு சொன்னீங்க"
"திருநெல்வேலி பக்கத்துல, தாழையூத்து..."

******
தமிழரசன் வீடு, தாழையூத்து ....

"நீங்க நன்றி சொல்ல இவ்ளோ தூரம் வந்ததே பெருசுங்க, பணம் எல்லாம் ஏதும் வேண்டாம்"
"இதுல பத்து லட்சம் இருக்குங்க வெச்சுக்கோங்க..."
"வேணாம்ங்க..அந்த முருகன் குடுத்த புள்ளதான் எங்க வேலன். போன வருஷம் திருச்செந்தூர் கோயிலுக்கு போயிட்டு வரப்போதான் அவனுக்கு அப்படி ஆச்சு...பஸ்ல வரும் போது மூச்சி விட முடியலன்னு சொல்லிட்டே மயங்கி விழுந்தான். 
அப்பறம் நெறைய டெஸ்ட் எடுத்தாங்க, இந்த சிமென்ட் தூள் அவன் நுரையீரல பாதிச்சுடுச்சுன்னு சொன்னாங்க, ஏதேதோ வியாதி பேர் எல்லாம் சொன்னாங்க... ஒண்ணும் புரியல...
காப்பாத்த நெறைய செலவு ஆகும்னாங்க... என் சக்திக்கு முடிஞ்ச வரைக்கும் கடனை எல்லாம் வாங்கி போராடினேங்க... ஆனா முடியல...

உசுர குடுத்து கூட காப்பாத நாங்க ரெடி ஆனா குடுக்கற உசுருக்கு யாரு காசு தர்றா..
உசுர குடுக்கறேன்னா காசு கெடைக்காது, ஆனா உசுர காப்பாத்த விலை வெக்கறாங்க...
உசுர காப்பாத்துற மருந்து இருக்கு, என்ன பண்ணும்னு அறிவு இருக்கு, ஆனா காசில்லதவங்க உசுர காப்பத்தணும்னு யாருக்கும் மனசு இல்லைங்க...

இவன் போனதுக்கு அப்பறம் நெறைய பேர் வந்து சொன்னாங்க, இங்க ப்ரீயா பண்றாங்க அங்க பண்றாங்கன்னு... ஆனா படிக்காதவங்க நானு, அப்போ ஒண்ணும் தெரியல ஒண்ணும் புரியல...
இன்னும் மூணு மாசம்தான் இங்க கான்ட்ராக்ட், அது முடிஞ்சதும் இந்த ஊரே வேணாம்னு சொந்த ஊருக்கே போய்டுவோங்க, மீதி இருக்க இந்த இன்னொரு புள்ள உசுரயாவது காப்பாத்தனுங்க "
"சரிங்க அந்த பயனுக்காவது இது ஆகட்டுங்க..."
இந்த பணம் இருந்திருந்தா எங்க வேலன நாங்க அப்போவே காப்பாத்திருப்போம்.... இப்போ இந்த பணம் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை.
ஒரு வருஷத்துக்கு முன்னாடி, எங்க வேலன் ஸ்கூலுக்கு வந்து, கண் தானத்த பத்தி யாரோ சொல்லிருக்காங்க. அப்போதான் அவன் வந்து அடம் பண்ணி அவனோட கண்ண தானம் பண்ண பதிவு பண்ணுனான், எங்களையும் பண்ண வெச்சான்.
நீங்க வேணா ஒண்ணு எங்களுக்காக செய்யுங்க, உங்களுக்கு ரெண்டு கண்ணு கெடச்சதுன்னா நீங்க நாலு கண்ணா குடுக்கலாமே..."


*****
திரும்பும் வழியில் ...

"படிச்சவங்க , நாம நல்லா இருக்கணும்னு நெனைக்கறோம் , படிக்காதவங்க , யாரவது நல்ல இருக்கட்டும்னு நெனைக்கறாங்க , இதான் யாமினி அவங்களுக்கும் நமக்கு வித்தியாசம்"

அவன் சொல்வதை காதில் வாங்காமல் அவள் மனது Eye Bank காண்டாக்ட் நம்பர் யாரிடம் வாங்கலாம் என எண்ணி கொண்டிருந்தது .

*****

Monday, June 25, 2012

உயிர் 2.0

இக்கதையின் முதல் பகுதி இங்கே.

ரயில் நிலைய பிளாட்பாரத்தில்,முருகனும் கணபதியும் , இருவரும் ரயில்வே போலிஸ். 

"முருகா , அது பிக்பாக்கெட் மணி மாதிரியில்ல இருக்கு.."
"ஆமாயா அவனேதான்,சீக்கிரம் வா புடிப்போம் "

இவர்கள் கவனித்ததை பார்த்த மணி, ரயில் பாதையிலேயே  ஓட துவங்கினான் . சிறிது தூரம் ஓடிய  பின் ஒரு ரயில் வருவதை கவனிக்காமல் திடீரென வேறு ஒரு Track-க்கு மாற நினைத்து அந்த ரயிலில் அடிப்பட்டு சிதைந்து போனான்.

துரத்தி வந்த இருவருக்கும்  அதிர்ச்சி, இது வெளிய தெரிந்தால் தாங்கள் துரத்தி வந்துதான் அவன் இறந்தான் என தெரிந்து பிரச்சனை ஆகிவி டும் என பயந்து வேகமாக திரும்பி விட்டனர்.

சிறிது நேரத்தில் தகவல் ரயில்வே போலிஸ் நிலையத்திற்கு வந்தது.

"சார் சீக்ரமா கையெழுத்து போடுங்க, ஒரு கேஸ் வந்துருக்கு போகணும் ... "

தன்  தாயே தன் சாவை தடுத்து நிறுத்தியதாக நினைத்து கலங்கி நின்ற ராம் மீண்டும் நிகழ்காலம் வந்தான்.

அவன் காப்பாற்றிய அந்த குழந்தையின் தாய்  ராமிடம்  நன்றி தெரிவித்து அவன் அட்ரசை வாங்கி கொண்டு அவர்கள் அட்ரசையும் கொடுத்தனர். இவனோ  போலியான ஒரு அட்ரஸ்தான் தந்தான்.

"மனிதனுக்கு உயிர் கொடுக்க மட்டுமே உரிமை இருக்கிறது, தன்  தாய் தந்த  உயிரை எடுக்க உரிமை இல்லை"  என்பதை உணர்ந்தான். இனி வீட்டிற்கு போக மனமில்லை, சாகவும் துணியவில்லை.

அடுத்த நாள் ...

ராம், தான் ஏற்கனவே வேலை செய்த கம்பெனியின் முதலாளியிடம் சென்று நடந்தவை எல்லாம் சொல்லி மீண்டும் தனக்கு வேலை தரும்படி கேட்டான் . ஆனால் இதே ஊர்  வேண்டாம் வேறு ஊரில்  வேலை தருமாறு கேட்டுக்கொண்டான். அங்கே சென்று யாருக்கும் தெரியாமல் வாழப்போவதாக  தெரிவித்தான்.

ஏற்கனவே அந்த முதலாளிக்கு இவன் மேல் நல்ல மதிப்பு இருந்ததால் , ஓசூர் கிளையில் சேருமாறும், அப்படியே புதிதாய் பெங்களூரில் தொடங்கப்போகும் கிளையின் பணிகளையும் கவனிக்கும்படி சொன்னார். சில ஆயிரங்களையும் தந்து, அந்த கிளையின் மேனேஜரிடமும் பேசினார். ராம், இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என கூறினான், அவரும் அவன் நிலை உணர்ந்து சரி என்றார்.

ராம், ஓசூர் வந்த இரண்டாவது நாளில் முதலாளி போன் செய்து அந்த அதிர்ச்சி செய்தியை சொன்னார். அவனால் நம்பவே முடியவில்லை, இருந்தாலும் இப்பொழுது அங்கே வருவது சரி இல்லை என்றும் இன்னும் மூன்று வாரம் கழித்து  வருவதே சிறந்தது என்று கூறினான், அவரும் சரி என்று ஒத்துக்கொண்டார்.

மூன்று வாரம் ஓடியது ....
ராம் அந்த இரவு நேரத்தில் முதலளில்யை சந்தித்தான் ...

"மொதல்ல, நீ எதுக்கு சாகனும்னு முடிவு பண்ணின"
"அன்னைக்கு நான் உயிரை விட்டா கூட கவலை பட யாரும் இல்லைன்னு இருந்த போது, என் உயிரை பத்தி எனக்கு எந்த கவலையும் வரல சார்"
 "இப்போ பாரு என்னென்னவோ நடந்துடுச்சு ... இவ்ளோ கொழப்பம் பாரு"
"ஆனா நான் தெளிவாகிட்டேன் சார்"
"என்ன சொல்ற "

"நீங்க தகவல் சொன்ன அந்த வாரமே நான் இங்க திரும்ப வந்து அந்த ரெயில்வே  போலிஸ் கிட்ட ரகிசயமா உண்மையா எல்லாம் சொல்லி நடந்தத  விசாரிச்சுட்டேன்"
"என்ன நடத்துச்சு?"
" சார்... நான் ட்ரைன்ல இருந்து குதிக்க நெனச்சப்போ ஒருத்தர் என்னோட பார்ச திருடிருக்கார், அவர் போலிஸ் கிட்ட மாட்டாம  இருக்க தப்பிச்சு போகும் போது ட்ரைன்ல அடிப்பட்டு சிதைஞ்சு இறந்துட்டார். அவர் கிட்ட இருந்த பர்ஸ் பாத்துட்டு எங்க வீட்டுக்கு தகவல் சொல்லிருக்காங்க. நானும் SMS  அனுப்பினதால அவங்களும் நம்பிட்டாங்க.
எங்க மாமனார் குடும்ப மானம் போய்டும்னு பணம் குடுத்து  தற்கொல விஷயத்த மறைச்சு, நானும் மைதிலியும் ட்ரைன்ல போகும்போது விழுந்து இறந்துடதா கதைய மாத்திட்டார்."
"அப்போ விவாகரத்து ?"
"அதுவும் பிராடுதான். எங்க என்னோட கடன் தொல்லை எல்லாம் அவங்களுக்கு வந்துடுமோன்னு பயந்து. ஏற்கனவே எனக்கும் அவளுக்கு விவாகரத்து அப்ளை பண்ணியாச்சுன்னு சொல்லிட்டாங்க, அதுக்கான ரெக்கார்ட் எல்லாம் போலியா ரெடி பண்ணிட்டாங்க."
"அவ்வளவு கொடுரமனவங்களா...  "
"அவங்களும் மனுஷங்கதான சார்  "
"இனி"
"சார் இப்போ என் பிரண்டு மூலமா வேற பேர்ல ஒரு லைசன்சு,பாஸ்போர்ட் எல்லாம் வாங்கிட்டேன். எந்த லஞ்சத்த வெச்சு அவங்க நான் செத்துட்டதா செஞ்சாங்களோ, அதே லஞ்சத வெச்சு நான் புதுசா பொறந்துட்டேன், சிவாஜி படத்துல வர்ற ரஜினி மாதிரி சார்."

"வாவ் கிரேட்"
"அந்த பிக் பாக்கட் பேரு மணி , 29 வயசு ஆகுது". 29 வருடங்களுக்கு முன்னாள் இறந்த அவன் தந்தையின் பெயர்.

"இதுல அதிசயம் என்னான்னா.... என்னோட உயிரை காப்பதினது எங்க அம்மான்னா... எனக்காக உயிரை விட்டது எங்கப்பா சார் ...

மனுஷனுக்கு உயிருங்கறது ஒன்னு இல்ல சார் ... ஒவ்வொரு உறவும் ஒரு உயிர். ஒண்ணொண்ணா பிரியுறப்போ ஒரு உயிர் போகுது. கடைசி உறவு போனதுமே அவன் வெறும் பொணம்தான்.

அப்படி ஒரு பொணமாத்தான் நான் சாக போனேன்... ஆனா விதி என்ன சாகவிடல...

இனியும் நான் சாகக்கூடாது, நான் வாழனும்.... ஒரு குழந்தைய தத்தெடுத்து வளரக்க போறேன் சார், புது உறவு ... புது உயிர் ... அந்த உயிருக்ககாவே நான் வாழப்போறேன் சார்"

"You are great Ram ... Sorry.... You are great Jeeva" என்றார் முதலாளி...

Friday, April 27, 2012

சுவடு - நிறைவு பகுதி


[பகுதி 1  - கடல் அலைகள்]
[பகுதி 2  - நினைவலைகள்]
[பகுதி 3  - பயணம் ]
[பகுதி 4  - குளச்சல்]
[பகுதி 5 - வைரவன்]
[பகுதி 6 - கரியான்]
[பகுதி 7 - பைரவி]   


அடுத்த நாள் ...

மகாதேவர் கோவில் முன்பு...

"என்ன விக்ரம் சொல்றீங்க, நான்தான் பைரவியா.... நாம போன ஜென்மம் இங்க இருந்தோமா"

"ஆமா பவானி, நீதான் பைரவி. உங்க அப்பா உன்னை எனக்கு திருமணம் செய்து தர முடிவு பண்ணினார். அது பிடிக்காத உன் மாமன் கரியான் உன்னை அடைய என்ன கொலை பண்ணிட்டான். கொன்னு கடலில் போட்டுட்டான்.

ஆனால் ஊர் முழுக்க தப்பி ஓடிட்டேன்னு பொய்ய  பரப்பிட்டான்.

ஊரே வைரவன பத்தி ... ம்ம்ம்... என்னை  பத்தி தப்பா பேச, அந்த அவமானம் தாங்க முடியாத  உங்கப்பாவும்  என்னை பிரிஞ்ச சோகத்துல நீயும் இதோ இதே கோவில் வாசல்லதான் உங்க உயிரை விட்டுட்டீங்க.

ஆனால் ரெண்டே நாள்ல கரியானும் தற்கொலை பண்ணிகிட்டான். உங்கள பிரிஞ்ச சோகத்துல அவன் செத்துட்டான்னு இந்த ஊர் நம்புச்சு.
ஆனா உன்னை சின்ன வயசுலருந்து காதலிச்சு, கல்யாணம் பண்ண முடியலைன்னும்,  உன் சாவுக்கு அவனே காரணம்னு உறுத்த, அவனும் உயிரை விட்டுட்டான். அந்த உண்மை யாருக்கும் தெரியல. "

"இதெல்லாம் எப்படி தெரிஞ்சது"

"பைரவியோட அப்பா பெரிய மருத்துவர், அவரோட வாழ்க்கை குறிப்பு இருந்த ஓலை சுவடிலதான் இந்த விஷயம் இருந்தது"  

"சரி ஆனா உங்களுக்கு முன் ஜென்ம நினைவு வந்துச்சு... கத்தி உங்க கைக்கே  வந்துச்சு.... அதனால நீங்க வைரவன் சரி... ஆனா நான்தான் பைரவினு எப்படி சொல்றீங்க "
"சொல்லப்போனா ... நீதான்  முதல்ல கடற்கரையில வைரவன் செத்து இருக்கறத பாத்த.... அதாவது என்னோட உருவத்துல... உனக்கு நியாபகம் இருக்கா... உன் கனவுல வந்ததா நீ கூட போன் பண்ணி சொன்னியே.. அன்னிக்கு நைட்டேதான் எனக்கு அந்த வாள் கெடச்சது.

அது மட்டும் இல்ல, நம்ம கல்யணம் என்னைக்கு Fix பண்ணிருக்காங்க?"

"பிப்ரவரி 18"

"தமிழ் தேதி..."

"மாசி 7"

"ம்ம்ம்ம்... இதே மாசி 7 -தான் வைரவனுக்கும்  பைரவிக்கும் கல்யாணம் Fix பண்ணிருக்காங்க. ஆனா போர் வர்றா மாதிரி இருக்குன்னு சொல்லி கரியான் கல்யாணத்த தள்ளி வெக்க சொல்லிட்டான். வைரவனும் சரிதான்னு ஒத்துக்கிட்டான்.

பைரவிக்ககா அவன் வாங்கிருந்தா தாலி கூட அந்த வாளோட சேர்த்து கட்டி வெச்சுருந்தான்."

"ஓ.. ஈஸ் இட் ... ஆனா.... என்னங்க இது தேதி ஒண்ணுன்னா ஆளும் ஒண்ணா  இருக்க முடியுமா "

"ஆளும் ஒண்ணுதான், இத பாரு புரியும்..."

அவள் கைகளில் அந்த ஓலையை கொடுத்தான்...

அதை அவள் படித்தால்... அதில் எழுதியிருந்தது....
"பைரவி - ஊரே அவள் கையால் மருந்து வாங்கினால் நிச்சயமா குணம் அடைவோம் என நம்பியது . 
அதிர்ஷ்டக்காரி, அரிதாய் காணக்கூடிய அதிர்ஷ்ட மச்சத்தை அவள் கை விரல்களிடையே கொண்டிருந்தாள்"

அதே சுவடு அவள் விரல்களில்....

"சரி வந்த வேலை முடிஞ்சது வாங்க போகலாம்  .... " என  இருவரையும் அழைத்தான் ஹரி.

எல்லா உண்மைகளும் அனைவருக்கும் புரிந்தது.

ஆனால் யாருக்குமே தெரியாத உண்மை, வைரவன் பைரவி சாவுக்கு காரணமான  கரியான்தான் இந்த ஹரி என்று !!!

மறுஜென்மத்தில் பலி வாங்க வேண்டும் என்றில்லை பரிகாரமும் செய்யலாம் 

  *******************************************************************

சுவடு - பைரவி (பகுதி 7)

பைரவி

[பகுதி 1  - கடல் அலைகள்]
[பகுதி 2  - நினைவலைகள்]
[பகுதி 3  - பயணம் ]
[பகுதி 4  - குளச்சல்]
[பகுதி 5 - வைரவன்]
[பகுதி 6 - கரியான்]

"டேய் ஹரி என்னடா சொல்ற "
"நெஜமாதாண்டா"
"நடந்தது ஏதும் எனக்கு நியாபகம் இல்ல, அதுக்காக இதெல்லாம் எப்படிடா நம்புறது"
"டேய் விக்ரம், நீ இப்படி ஏதாவது சொல்லுவேன்னு தெரியும், அதான் நான் யாருக்கும் தெரியாம நீ பேசுனத ரெக்கார்ட் பண்ணிட்டேன்."

விக்ரம் அந்த பெரியவரின் குடிலில் பேசிய அனைத்தும் கேட்டு ஆச்சர்யப்பட்டான்.

"இப்பவும் இப்படி எல்லாம் நடக்குதா ஹரி,நம்புற மாதிரியே இல்லையே..."

"நீ வேற, இன்னமும் நம்ம ஊரு போலீஸ்காரங்க கொலைகாரன புடிக்க ஆவி கிட்ட பேசுறாங்க... இங்க இல்ல உலகம் பூர இது நடக்குது ..."

சரி சரி இனி நேரத்த கடத்த வேணாம் , உடனே நாம குளச்சல் போலாம்.
பால நம்பூதியும் சில ஓலை சுவடிகளை எடுத்துகிட்டு அங்க வர்றேன்னு சொல்லிருக்கார்.

"யாருடா இந்த பைரவி? எதுக்காக கரியான் வைரவன கொல்லனும்"
"எல்லாம் அங்க போனா தெரியும்னு நெனைக்கிறேன், உன்ன ஆத்துல குளிச்சிட்டு  கூட்டிட்டு வர சொன்னாரு"

இருவரும் குளச்சல் வந்து சேர்ந்தனர். இவர்கள் வரும் முன்னரே பால நம்பூதிரி, அந்த பெரியவர், மகாதேவர் கோவில் பூசாரி என அனைவரும் அங்கே வந்திருந்தனர்.

ஊரில் உள்ள நிறைய பேர் திரண்டிருந்தனர். 

வைரவன் பற்றி இத்தனை நாள் தவறாக எண்ணியதற்க்காக மக்கள் வருந்தினர். அவன் மீது இருந்த பழியை துடைக்கவே வைரவன் மறு உருவம் கொண்டு வந்ததாய் நம்பினார்.

டீ லானாய், அவருடைய போர் குறிப்பில் வைரவன் என்று யாரும் டச் படைக்கு உதவி செய்யவில்லை என்றே எழுதியிருந்தார்.

அந்த வாள், மீனாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டு, மக்கள் அதனை வணங்கினர்.

வாள், அதற்குரிய இடம் வந்து சேர்ந்து, அதற்கான மரியாதையையும்  பெற்றுகொண்டது.

பால நம்பூதிரி ஓலை சுவடியை  படிக்க ஆரம்பித்தார்....

படிக்க படிக்க விக்ரமின் முகத்தில் சிறிது புன்னகை வந்தது...

அவனுக்கு இப்பொழுது தெளிவாய் எல்லாம் புரிந்திருந்தது...

ஹரிக்கு ஒன்றும் புரியவில்லை...

அதில் ஒரே ஒரு ஓலை மட்டும் விக்ரம் வாங்கிக்கொண்டான்.

படித்து முடித்ததும் கோவிலை விட்டு வெளியே வந்த விக்ரம், அவன் அப்பாவை அழைத்து நடந்தவை அனைத்தையும் சொன்னான்...

அப்படியே பவானியும் அழைத்தான் ...

"சொல்லுங்க விக்ரம்"

மெலிதான புன்னகையுடன் சொன்னான், "பைரவி.....", கையில் அந்த ஓலையுடன்.

[சுவடு - நிறைவு பகுதி ]