Pages

Friday, February 24, 2012

பூப்போல்... பூப்போல்... [Extended]


[இந்த வெர்ஷன் "Day 25: Feb 12 2012, 9 AM" வரை இதற்கு முன் இருந்தவைதான், அதன் பின் மாறியிருக்கிறது]


Day 1: Jan 19 2012, 8.30 AM

"எந்தவொரு சரித்திர நாளும் சாதாரணமாகத்தான் விடியும்"

அன்றும் அப்படித்தான் எப்பவும் போல விடிந்தது அவனுக்கு, காலை 8 மணிக்கு. அதே டீ கடை வாசல், இரண்டு கைகளிலும் புகையுடன், மதன். ஒரு கையில் சூடான டீ , இன்னொரு கையில் சிகரெட்.

இன்றுதான் அவன் முதல் முறையாக அவளை பார்க்கிறான். 

Day 6: Jan 24 2012, 10 PM

"நாந்தாங்க மதன். என் சொந்த ஊரு மேட்டுப்பாளையம், இங்கதான் பக்கத்துல ஒரு கம்பனில குவாலிட்டி இஞ்சினியரா இருக்கேன். நான் ரொம்ப சிம்பிளானவன், ஆனா பிரண்ட்ஸ் எல்லாரும் தான் என்னை  'என்ன ஆர்யான்னு நெனப்பா'-ன்னு ஓட்டுவாங்க, ஆனா நான் அவருக்கெல்லாம் காம்ப்பட்டீஷன் இல்லைங்க. எனக்கு ஒரு ரூம் மேட், ஒரே ரூம் மேட், வசந்த். ஆனா இவன் சந்தானம்  மாதிரிதான், கொஞ்சம் ஏமாந்தா கழுவி ஊத்திடுவான். அவன்கிட்டதான் இன்னைக்கு அவளை பத்தி சொல்லலாம்னு இருக்கேன், அவள பாத்து ஒரு வாரம் ஆச்சு, ஏன் சொல்லலைன்னு கேப்பான், எதாவது சொல்லி சமாளிக்கணும். இன்னைக்குன்னு பாத்து லேட்டா வரானாம். நாளைக்கு அவன் ஊருக்கு போனா, 5 நாள் கழிச்சுதான் வருவான். அதுக்குள்ளே சொல்லிடனும், பாவம். அப்பறம் சொன்னா ரொம்ப கோவிச்சுப்பான்"

Day 6: Jan 24 2012, 11.30 PM

" டேய் என்னடா எதோ முக்கியமான விஷயம் இன்னைக்கு பேசணும்னு சொன்ன.. ஹவுஸ் ஓனர் வீட்ட காலி பண்ண சொல்லிட்டானா "

" டேய் போன வியாழக்கிழம என்ன நடச்சுன்னா, காலைல நம்ம கடையில தம் அடிச்சுட்டு இருந்தேண்டா ..   அவள  தூரத்துல பாத்தேண்டா .... மொத தடவ .. லேவண்டர் கலர் சல்வார்... தூரத்துல எதோ Puzzle மாதிரி தெரிஞ்சாடா...  கிட்ட வர வர அந்த Puzzle தானா சால்வ் ஆகுற மாதிரி இருந்தது..  அவ என்ன கிராஸ் பண்றப்போ அப்படியோ புல்லா  Answer கெடச்சா மாறி இருந்துச்சுடா.... என் வாழ்க்கைக்கே Answer கெடச்சதுடா..."

"என்னடா ஏதேதோ சொல்ற... யாருடா அவ..."

"மைதிலிடா... டிஸ்டர்ப் பண்ணாம முழுசா கேளுடா... "

"சொல்லு..."

"அவ என்ன கிராஸ் பண்ணுனத அப்படியே ரீவைண்ட் பண்ணி, மறுபடி மைன்ட்-ல பிளே பண்ணினேன் .. பூப்போல்.. பூப்போல்... என் நெஞ்சை கொய்தவள்... பாட்டு மியுசிக்கோட ஓடுதுடா.."

"ஹாரிஸ் ஜெயராஜ் பேக்-கிரவுண்ட்  மியுசிக்... உனக்கு... ம்ம்ம்ம்... அப்பறம் சொல்லு..."

"அப்பறம் டெய்லி நான் அதே டைம்-க்கு அங்க போய்டுவேன்.. ஆனா அவ டைம் மாறி மாறிதான் வந்தா...  என்ன இருந்தாலும் மிஸ் பண்ணாம அந்த மிஸ் கண்ணுல படனும்ல... ஆமாடா அவ ஸ்கூல்  மிஸ் .... பசங்க படத்துல வர்ற  சோபிக்கண்ணு மாதிரி இருக்கும்னு  ஒரு நாள் ஸ்கூல் - க்கே போயிட்டேன்டா, குட்டீஸ் கிளாஸ் எல்லாம் தேடுனேன், அங்க இல்ல .. ஒரு வேள காக்க காக்க மாயா டீச்சர் மாதிரி இருப்பான்னு 10th  கிளாஸ் போயி பாத்தா அதுவும் இல்ல  ..."

"டேய் .. நிறுத்து... அடுத்தது கடலோர கவிதைகள் ஜெனிபர் டீச்சர் மாதிரி டுடோரியல் கிளாஸ் எடுக்கரவ-னு சொன்னீன்னா செருப்பு பிஞ்சுடும் ... உன் கதைய கேக்குறதே பெருசு, இதுல ஊர்ல இருக்கற சினிமா கதையெல்லாம் எதுக்குடா ... ஒழுங்கா சொன்னா சொல்லு, இல்ல என் வேலைய பாக்க போறேன்..."

"உன் வேலையே அடுத்தவன் கதைய கேக்குறதுதான, புதுசா என்ன வேல உனக்கு"

"டேய் கோவம் வந்தா நான் கெளம்பிடுவேன்டா"

"டேய் நைட் 11 .30 மணிக்கு நீ எங்கடா கெளம்புவ.."

"தெரியுதுல்ல மணி ஆகுதுன்னு.... சாவடிக்காதடா  .. சொல்லி தொலடா ..."

அதுக்கப்பறம் நான் எவ்ளோ நேரம் சொன்னேன், அவன் எவ்ளோ நேரம் கேட்டான்னே தெரியல... அப்படியே தூங்கிட்டோம், முழிச்சு பாத்தா விடிஞ்சுடிச்சு... அவன் ஆள காணோம்...

"சரி இனி நானே டீல் பண்ணிக்கிறேன்னு முடிவு பண்ணிட்டேன். அவள  எனக்கு புடிக்கறதுக்கு எந்த காரணமும் இல்ல, ஆனா யாராவது கேட்டா இத சொல்ல முடியுமா..ஏன் அவளே கேட்டா கூட நான் என்ன சொல்றது .. அதான்  அவள பாலோ பண்ணி அவ கிட்ட இருக்கற நல்ல கேரக்டர்ஸ் எல்லாம் கண்டுபிடிச்சு, நானே காரணம் உருவாக்க முடிவு பண்ணிட்டேன்."

Day 15: Feb 2 2012, 5 PM

"ரெண்டு வாரம் மைதிலி பின்னாடி அலைஞ்சு நான் கண்டுபுடிச்ச... இல்ல எனக்கு புடிச்ச விஷயம்...

மார்க்கெட்ல நெறையா பேர் இருந்தும்தினமும் அந்த வயசான பாட்டிக்கிட்டதான் பூ வாங்கி தலையில வெச்சிக்கறா ... வயசானவங்க நல்லா இருக்கட்டும்னு நல்ல எண்ணம்...

கோவில்ல கண்ண மூடி சாமி கும்பிடும் போது வாய் திறக்காம உதடு மட்டும் சாமிகிட்ட பேசுறது ரொம்ப அழகா இருந்தது...

தினமும் அவங்க ஸ்கூல் வாட்ச்மென் தாத்தாவ  சாப்டீங்களா-ன்னு கேப்பா

போன் எடுத்ததும் ஹலோ சொல்லாம 'சொல்லுங்க'-னு சொல்றது...

இன்னொரு முக்கிய விஷயம், அவளும் என்னை மாதிரி நெறைய சினிமா பாக்குறா

இன்னும் நெறையா விஷயம் புடிச்சிக்கிட்டே இருந்தது... 

இதுல இன்னொன்னு என்ன தெரிஞ்சுதுன்னா எனக்கு புடிக்காதது ஒரு தனி லிஸ்ட வருது ... ஆனா அதெல்லாம் விடுங்க... அதுவும் நல்லதுதான்...  அதெல்லாம் ஒண்ணொண்னா திருடா திருடி சாயா சிங் மாதிரி மாத்திக்க சொல்லிடலாம்.

சரி, இந்த வசந்த் பயன்கிட்ட இத காமிச்சு பெஸ்ட் எல்லாம் செலக்ட் பண்ணனும்"

Day 20: Feb 7 2012, 6.30 PM

இதற்கிடையில் மைதிலியும் இவன் தொடர்வதை கவனித்துவிட்டாள். அவளும் இவனுடைய நெம்பரை யாரிடமோ வாங்கி போன் செய்தாள்.

" நானும் பாத்துருக்கேன் உன்ன...  என் பொறந்த நாள் அன்னைக்குதான் உன்ன மொதல்ல பாத்தேன் ... அந்த பொட்டி கடைல தம் அடிச்சிட்டு நின்னுட்டு இருந்த... நீயும் என்ன பாத்த, எதோ பட்டிக்காட்டான் முட்டாய் கடைய பாத்த மாதிரி ... அப்புறம் ரெண்டு வாரம் பின்னாடியே பாலோ பண்றது... ஸ்கூல்க்கு வந்து எட்டி பாக்குறது .. எனக்கு இதெல்லாம் பிடிக்காது... அப்பறம் போறப்போ வரப்போ கொரங்கு சேஷ்ட பண்றது...  நீ என்ன இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ணறேன்னு தெரியுது.. உனக்கு இது தான் வேலையான்னு எல்லாம் எனக்கு தெரியாது ஆனா எனக்கு இது தேவை இல்லாத வேலை"

வேகமாய் சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்தாள்.

"என்ன இவ எங்கேயும் எப்போதும் அஞ்சலி மாதிரி பேசுறா... அவ பொறந்த நாள் எல்லாம் எதுக்கு சொல்றா ... பரவால்ல.. ஆனா நல்லவேளை என்னை புடிக்கலைன்னு சொல்லல.. அவளும் இப்போ நம்மள  பாக்குறா..  இனி நான் எந்த கொரங்கு வித்தையும் பண்ண தேவையில்ல. நிச்சயமா அவ என்ன இனிமேல் கவனிப்பா ..."

Day 21: Feb 8 2012, 11 PM 

"என்னடா எழுதுற இந்நேரத்துல ... ", வசந்த்.

"Valentine's Day வரதுக்குள்ள அவள ஒகே சொல்ல வெக்கணும், அதான் டிரை பண்ணுறேன்... இந்த வருஷம் அவ கூடத்தான் Valentine's  day  கொண்டாடனும்.. "

"டேய் Valentine's Day எதுக்குன்னா.. இப்ப லவ் பண்ற பொண்ணு கூட கொண்டாடுறதுக்கு இல்ல... இதுக்கு முன்னாடி நாம லவ் பண்ணுன பொண்ணுங்க எல்லாரையும் நெனச்சு பாக்கத்தாண்டா ...."

"என்ன ஆட்டோகிராப்-பா "

"சேரன் நல்லவர்டா... மூணு மணி நேரத்துல படம் முடிஞ்சுடுச்சு...  நம்ம ஆட்டோகிராப்-லாம் எடுத்தா மூணு நாள் ஓடுமேடா..."

"வேணாம் ஓடி போய்டு கடிச்சு வெச்சுடுவேன்..."

Day 22: Feb 9 2012, 5 PM 

அவள் பள்ளிக்கு செல்லும் வழியில்... 

"இதென்ன டைரி , டெய்லி நீங்க என்னை பத்தி எழுதுனதா..."

"இல்ல.. ஒரே நாள்ல எழுதுனது , என்னை பத்தி ... எனக்கு உன்ன பத்தி நெறைய தெரியும் ஆனா உனக்கு  என்னை  பத்தி ஒண்ணுமே தெரியாது. இதுல என்னை பத்தி நெறைய எழுதிருக்கேன், உனக்கு என்னை பத்தி எப்ப தெரிஞ்சிக்கணும்னு தோணுதோ அப்போ படி...

நானும் பாத்துருக்கேன்... நான் பாக்கறப்போ நீ அழகா தெரியணும்னு நெனைக்கற, நெறைய தடவ அத நான் நோட் பண்ணிருக்கேன்... நான் உன்ன கவனிக்கனும்னு நீயும் எதாவது பண்ணுவ, ஆனா நான் பாக்குறப்போ பாக்காத மாதிரி நடிப்ப.. ஏன் நடிக்கற...
உனக்கு என்ன பிடிக்காம வெறுக்கல, பிடிச்சுடகூடாதுன்னு வெறுக்கற ..  இல்ல...  இல்ல... வெறுக்கற மாதிரி நடிக்கற..."

"ஹலோ இந்த விக்ரமன் பட டயலாக் எல்லாம் இங்க வேண்டாம், கெளம்புங்க.." திரும்பி பார்க்காமல் நடந்தாள் அவள்.

சிறிது தூரம் சென்ற பின்தான் உணர்ந்தாள், அவன் தந்த டைரி அவள் கையில்...  "இந்த குப்ப தொட்டியில போட்றலாமா.. வேணாம் அவன் பாத்துட்டான்னா.. பாவம்... "

Day 25: Feb 12 2012, 9 AM

"ஐயோ இன்னும் ரெண்டு நாள்ல பிப்ரவரி 14  வேற வருது, இந்த மதன் ஏதாவது  லூசு மாதிரி ட்ரை பண்ண போறான். அவனும் உருப்படாம, நம்மளையும் டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு ... இன்னைக்கு இதுக்கு ஒரு எண்டு கார்டு (End Card) போட்டு கதைய முடிச்சுட வேண்டியதுதான் ..."

SMS  தட்டினால், "Come to coffe day near race course road thomas park at evening 5 today"

"ஒரு அஞ்சு நிமிஷம் அவன் என்ன சொல்றான்னு கேட்டுட்டு, அரை மணி நேரம் அட்வைஸ் பண்ணி அப்படியே தொரத்திட வேண்டியதுதான்."

Day 25: Feb 12 2012, 5 PM

"இங்க பாரு மதன் எனக்கு நேரம் இல்ல... உனக்கு அஞ்சு நிமிஷம்தான் டைம், அதுக்குள்ளே என்ன சொல்லணுமோ சொல்லு."

"மைதிலி, இந்த அஞ்சு நிமிஷத்துல நான் உன்ன காதலிக்கறேன்னுதான் சொல்ல முடியும்ஆனா  அத  நீ  புரிஞ்சிக்க  ஆயுசு  முழுக்க  என்  கூட  இருக்கணும். உன் வாழ்க்கையில குறுக்க வந்தவனா நான் இருக்க கூடாது, கடைசி வரைக்கும் உன் கூட வர்றவனா இருக்கணும்."
சொல்லிவிட்டு திரும்பி நடந்தான் ....

திடீரென நின்றவன் திரும்பி, "உன்னோட மீதி மூணு நிமிஷத்த உன்கிட்டையே குடுத்துட்டேன்"  என கூறி, தன்னை ஒரு விக்ரமன் பட ஹீரோ போல நினைத்துக்கொண்டு, மீண்டும் நடந்தான் .

Day 26: Feb 13 2012, 8 PM

டேய் என்னடா இப்படி ரூம்ல லைட்டு கூட போடாம உக்காந்துருக்க, வசந்த்.

இல்லடா, நேத்து மைதிலி எனக்கு போன் பண்ணி பேசனும்னு சொன்னா, நானும் போனேன். போயி ரெண்டே நிமிஷம் பேசிட்டு வந்துட்டேன்

“சூப்பர்டா... அவ என்ன சொன்னா...

அவ எதும் சொல்றத்துக்கு முன்னாடி, நான் பேசிட்டு உடனே வந்துட்டேன்.

ஏண்டா, லூசா நீ, அவதான வர சொன்னா, அவ உனக்கு ஏதாவது நல்ல பதில் வெச்சிருந்தா...

இல்லடா அவ கையில எதுமே கொண்டு வரல, கண்டிப்பா லவ் டுடே கிளைமாக்ஸ்ல வர விஜய் மாதிரி அரை மணி நேரம் எனக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பிருப்பா.

இப்போ என்னதாண்டா பண்ண போற

இப்போ ஒண்ணும் பண்ணலடா, ஆனா காலையிலேயே ஒரு வேலை பண்ணிட்டேன்

என்னடா

நாளைக்கு வேலன்ட்டைன்ஸ் டே, உன்னோட பதில நாளைக்கு எதிர்பாக்குறேன்னு SMS பண்ணிட்டேன், ரிப்ளைக்கு காலைலருந்து வெயிட் பன்றேன்டா

அப்போ நீ கம்பனிக்கு போகலியா..

இல்லடா நானே டென்சனா இருக்கேன்... காலைலருந்து பல்லுல பச்சைத்தண்ணி கூட படாம உக்கந்துருக்கேன்

அப்போ வெளிய பீசா டப்பாவும் பெப்சி டின்னும் கெடக்குது

அது... சும்மா.. பசிச்சுதுன்னு...

ஓ.. பீசாவும் பெப்சியும் முழுங்கிருக்க...அதனால பல்லுல பச்சைத்தண்ணி கூட படல..

Day 27: Feb 14 2012, 8 AM

டேய் என்னடா நேரமாவே முழுச்சிடியா...

தூங்கவே இல்லடா.. மிட் நைட் 12 மணிக்கு கால் பண்ணுவான்னு முழிச்சிட்டு இருந்தேண்டா, ஆனா வரவே இல்லைடா...

சரி அப்போ நீயே கால் பண்ணி பேசிட வேண்டியதுதான

இல்லைடா இனிமே நானா டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்னு நைட்டே SMS பண்ணிட்டேன்டா ...

டேய் போன மாசம் வரைக்கும் நல்லாத்தாண்டா இருந்த திடீர்னு எங்கருந்துடா வருது இந்த லவ்வு

மௌனம் பேசியதே சூர்யான்னு நெனப்பா... உருப்படியா எதாவது ஐடியா சொல்லு...

நீ ம்ம்ம்மன்னு சொல்லு அவள தூக்கிடலாம்

ம்ம்ம்ம்

டேய்.... டேய்.... இப்ப இல்லடா நல்லா யோசிச்சுட்டு அப்பறம் சொல்லு..

அதில்லடா... காதல நாம குடுக்கத்தான் முடியும் வாங்க முடியாது...

அய்யயோ இவன் விக்ரமனா மாற ஆரம்பிச்சுட்டான்.. நான் கம்பனிக்கு கேளம்புறேண்டா...

Day 27: Feb 14 2012, 8.23 AM

பீப்... பீப்...

“Come to coffe day near race course road thomas park at evening 5 today : )”

அதே SMS மீண்டும்...

Day 27 : Feb 14 2012, 5 PM

ஹாய் மதன்

ஹாய்

வந்து ரொம்ப நேரம் ஆச்சா

இல்ல ஒரு பத்து நிமிஷம்தான்

கையில் இருந்ததை பார்த்ததும் அதிர்ந்தான்...

அவன், அவள் கண்களை கூர்ந்து கவனித்தான், என்ன எண்ணத்தில் வந்திருக்கிறாள் என்றே புரியவில்லை.

அவன் கொடுத்தா அதே டைரி ... கைகளில் வேறு எதுவுமே இல்லை... அவன் இதனை எதிர்பார்க்கவே இல்லை...

இந்தாங்க உங்க டைரி

டைரிய படிச்சாச்சா

இல்லை, மொத பேஜ் மட்டும் ஓபன் பண்ணினேன் அப்பறம் மூடி வெச்சிட்டேன்

கையில் வாங்கும் போது, அவன் மலர்ந்த முகம் அப்படியே மழுங்கி போனது...

அவள் மெல்லமாய் புன்னகையோடு,சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா குரலில்,  இனிமே... காலம் பூரா உன் கதையதான கேக்கணும்... அதான் ஏன் இப்பவே படிக்கணும் மூடிவெச்சுட்டேன்... காலைல அனுப்பின SMS-ல ஒரு ஸ்மைலி எக்ஸ்ட்ராவா போட்டுருந்தனே பாக்கலியா, டியுப்லைட்டு...

அதை கேட்க கேட்க அவனுக்கோ அந்த இடமே ஷங்கர் பட கிராப்பிக்சில், சுவிட்சர்லாந்தாகவும் சான் பிரான்ஸிஸ்கோவாகவும் மாறிக்கொண்டிருந்தது.

அந்த டைரிய ஓபன் பண்ணி பாருங்க...
முதல் பக்கத்தில் அவன் எழுதியிருந்த என் வாழ்க்கை என்ற தலைப்பை என் வாழ்க்கை நீ என்று மாற்றிவிட்டாள்...

பரவசத்தில் பறந்து கொண்டிருந்த அவன் நிமிர்ந்து பார்த்தபொழுது...

கையில் பெரிய பூங்கொத்து, அத்தனையும் ரோஜா... எங்கிருந்து வந்ததோ...

கையில் ரோஜா, முகத்தில் மல்லிகையுடன் சொன்னாள், Happy Valentines Day...

No comments:

Post a Comment